பாகிஸ்தான் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் முகம்மது நவாஸ், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஊக்கமருந்து தடுப்பு (Anti-Doping) விதிமுறையை மீறியதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது.
எனினும், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தால், இந்த தடை ஒரு மாதமாகக் குறைக்கப்படும் என்றும் ICC தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ICC ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டியில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், நவாஸின் மாதிரியில் Carboxy-THC என்ற தடைசெய்யப்பட்ட பொருள் கண்டறியப்பட்டதாக ICC தெரிவித்துள்ளது.
32 வயதான நவாஸ், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், அந்தப் பொருள் போட்டிக் காலத்திற்கு வெளியே பயன்படுத்தப்பட்டதென்றும், அது தனது விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்றும் விளக்கியுள்ளார்.
அவரது தடை காலம், தன்னார்வ அடிப்படையில் இடைக்கால இடைநீக்கத்தை ஏற்றுக்கொண்ட 2026 மே 1 முதல் அமுலுக்கு வந்ததாகவும், இதுவரை இரண்டரை மாத காலத்தை அவர் நிறைவு செய்திருப்பதாகவும் ICC தெரிவித்துள்ளது.
மேலும், சிகிச்சைத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தால், அவருக்கு மேலதிக தடை காலம் விதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2026 பிப்ரவரி 7 ஆம் திகதி நெதர்லாந்துக்கு எதிரான போட்டி மற்றும் அதன் பின்னர் மே 1 வரை அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பதிவு செய்யப்பட்ட பெறுபேறுகள் செல்லுபடியாகாது என்றும் ICC உறுதிப்படுத்தியுள்ளது.





