ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பயங்கரத் திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் ’20 பேர்’ உயிரிழந்துள்ளனர். 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் 100 இற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்படுகிறது.
நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பாரூன் நகரமே இந்த வெள்ளத்தினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகம், உணவகங்கள், நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்துள்ளன.
பாரூன் நகர மேயர் மற்றும் பல அரசு ஊழியர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ள நீருடன் பெரிய பாறைகளும் இடிபாடுகளும் அடித்து வரப்பட்டுள்ளதால், போதிய நவீன உபகரணங்கள் இல்லாத நிலையிலும் உள்ளூர் மக்களும் பேரிடர் மீட்புக் குழுவினரும் இடிபாடுகளுக்கிடையே மனித உயிர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உலக நாடுகளில் ஆஃப்கானிஸ்தானும் ஒன்று. தெற்காசியாவில் தீவிரமடைந்துள்ள பருவமழைப் பொழிவு இங்கு திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூரிஸ்தான் பகுதி அடர்ந்த காடுகளுக்கும் இயற்கை எழிலுக்கும் பெயர் பெற்றது. இருப்பினும், சமீபகாலமாக நடைபெற்று வரும் சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் காடழிப்பு காரணமாக, நிலத்தின் மழைநீரை உறிஞ்சும் இயற்கைத்தன்மை குறைந்து வெள்ளத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.
தாலிபன் அரசாங்கத்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நாட்டின் 34 மாகாணங்களில் 10 மாகாணங்களில் தொடர்ந்து கனமழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. நதிக்கரைகள் மற்றும் ஆபத்தான தாழ்வான பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.





