இலங்கை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் BBC சிங்கள சேவை ஊடகவியலாளர்கள் இருவரை அழைத்துள்ளமைக்கு இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் (SLWJA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது ஊடக அடக்குமுறை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என சங்கம் தெரிவித்துள்ளது.
BBC சிங்கள சேவையின் தயாரிப்பாளர் இஷாரா தனசேகர மற்றும் ஊடகவியலாளர் சம்பத் திஸாநாயக்க ஆகியோர் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் ஏற்பட்ட தாமதம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் சந்திப்பு தொடர்பான BBC செய்தி அறிக்கையே இதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் லக்மலி ஹேமச்சந்திர வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சபாநாயகரின் உத்தரவின் பேரில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை செய்தி அறிக்கையிட்டமைக்காக பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் அழைப்பது ஊடக சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறுத்தல் என SLWJA தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளை உடனடியாக மீளப் பெறுமாறும், ஊடகங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஊடக சுதந்திரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.





