தேவிநுவரை தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெராவில் பங்கேற்கும் கடி நடனக் குழுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே (OIC) திலின மதுசங்கவுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊடகத் தகவல்களின்படி, அவரை மிரட்டும் வகையிலான ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அதேபோல், பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலர் ஒருவருக்கொருவர் மிரட்டும் மற்றொரு ஒலிப்பதிவும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி ஒருவர், தேவிநுவரை தேவாலயத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள வீடு ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாகக் கூறப்படும் மற்றொரு ஒலிப்பதிவும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது.
இந்த சம்பவம், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒலிப்பதிவுகளின் உண்மைத்தன்மை ஆகிய அனைத்தையும் குறித்து இலங்கை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





