ஜூலை 23, 2026
காலநிலை மாற்றத்தால் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கடும் வெப்பநிலை, “பாலைவனத்தின் கப்பல்” என அழைக்கப்படும் ஒட்டகங்களைக்கூட கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளதாக BBC வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட பகுதிகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் அஃபார் (Afar) பகுதியில், ஒட்டகங்கள் வெப்ப அழுத்தம், நீரிழப்பு மற்றும் நோய்த் தாக்குதல்களுக்கு அதிகளவில் உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டக வளர்ப்பாளரான அலி உமர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடும் வெப்பத்தால் தனது 8 ஒட்டகக் குட்டிகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், ஒட்டகங்களின் பாதங்களில் கொப்புளங்கள், கண்களில் நீர் வடிதல், தோல் சேதம் மற்றும் முடி உதிர்வு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சோமாலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், வறட்சியால் ஒட்டகம் வளர்க்கும் குடும்பங்களில் சுமார் 46% குடும்பங்கள் ஒட்டக இழப்பை சந்தித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கென்யாவிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கடும் வெப்பத்தால் ஒட்டக இறப்பு 15% அதிகரித்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நிபுணர்களின் கருத்துப்படி, ஒட்டகங்கள் பொதுவாக 40°C வரை வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. எனினும், 41–50°C அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலை நீடித்தால், அவற்றின் உடல் செல்கள், நோய் எதிர்ப்பு அமைப்பு, பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத் திறன் ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருவதால், பல ஒட்டக வளர்ப்பாளர்கள் வட எத்தியோப்பியாவிலிருந்து தெற்கு பகுதிகளுக்கு நிரந்தரமாக இடம்பெயரத் தொடங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் மனிதர்களை மட்டுமின்றி, கடுமையான பாலைவன சூழலிலும் வாழக்கூடிய ஒட்டகங்களின் உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





