சம்மாந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் பயணித்த இருவர் மற்றும் போதைப்பொருளுடன் இருவர் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, பொலிஸ் ஜீப் வாகனத்திற்கு முன்னால் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சாகசமான முறையில் பயணித்த நான்கு இளைஞர்கள் தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த குறித்த நால்வரில், மோட்டார் சைக்கிள்களை செலுத்திச் சென்ற இருவர் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டு, புகைப்படங்கள் மூலம் தேடப்பட்ட பின்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள், குடு வகை போதைப்பொருளுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைகள், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கஸ்தூரி ஆராச்சி, Acting Ampara Division பொறுப்பதிகாரி சம்பத் விக்கிரமரத்ன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எம்.கே. இப்னு அசார் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார் தலைமையில், விஜேவர்தன, PC 6198 மதன், SA பாரூக் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், போதைப்பொருள் கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமையவும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலிலும், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





