இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவர், மீன்பிடிக்கச் சென்றபோது படகின் இயந்திரம் செயலிழந்ததால் 36 நாட்கள் கடலில் தத்தளித்த நிலையில், பங்களாதேஷ் கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் தேவினுவர பகுதியைச் சேர்ந்த எஸ்.எச். சமிந்த மற்றும் அவரது மகன் சௌந்த ஹன்னடிகிபியவட்டிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் நான்கு மீனவர்கள் இலங்கையிலிருந்து கடலுக்குச் சென்றிருந்தனர். மோசமான வானிலையால் படகின் இயந்திரம் செயலிழந்ததைத் தொடர்ந்து, மற்ற இரு மீனவர்கள் மூன்று நாட்களுக்குப் பின்னர் மற்றொரு படகின் உதவியுடன் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், அது தங்களது சொந்தப் படகு என்பதால் தந்தையும் மகனும் அதிலேயே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடலுக்குச் சென்ற ஏழு நாட்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்ததால், அதன் பின்னர் 29 நாட்கள் அவர்கள் மீன்பிடி இரை மற்றும் கடலில் பிடித்த பச்சை மீன்களை உண்டு உயிர் வாழ்ந்துள்ளனர்.
இதற்கிடையில், மியான்மரைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சிலர் படகில் ஏறி தொலைநோக்கி, கமெரா உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் பங்களாதேஷின் கொக்ஸ் பசார் மாவட்டத்திற்கு அருகிலுள்ள மஹேஷ்காலி கடற்பரப்பில் உள்ளூர் மீனவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து மீட்டு, படகையும் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து சட்ட நடைமுறைகளுக்காக அவர்கள் மஹேஷ்காலி பொலிஸாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விரைவில் இலங்கைக்குத் திரும்ப உதவுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





