இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கடந்த 17-ந் திகதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
அரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையேயான வழித்தடத்தில் இந்த பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றுக்கு இடையேயான இரசாயன மாற்றம் நிகழ்வதன் மூலம் ஏற்படும் மின்சாரத்தை பயன்படுத்தி பயணிக்கிறது.
இந்த செயல்பாட்டின் போது வெளிவரும் ஒரே கழிவு அல்லது உபபொருள் நீர் ஆவி மட்டுமே ஆகும்.
இதில் எந்தவித காற்று மாசுபாடும் கிடையாது. ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின்கீழ் இந்திய ரயில்வே திணைக்களத்தினால் முற்றிலும் உள்நாட்டிலேயே இது வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் இந்த ரயில் பயணத் திட்டம் பசுமை போக்குவரத்து துறையில் ஒரு பாரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.





