ஜப்பானில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக டோக்கியோவிலுள்ள உயிரியல் பூங்காவில் மூன்று சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டமா விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 16 சிங்கங்களில் 10 சிங்கங்கள் கடந்த ஜூலை நடுப்பகுதியிலிருந்து உணவு உட்கொள்ளாமை மற்றும் சுறுசுறுப்பு குறைவு போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் மூன்று பெண் சிங்கங்கள் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்புக்கான காரணம் வெப்ப தாக்கம் (Heatstroke) என சந்தேகிக்கப்படுகிறது. நீரிழப்பு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு போன்ற அறிகுறிகள் கால்நடை மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளன.
ஜப்பானில் அண்மைய வாரங்களில் வெப்பநிலை 40°C வரை உயர்ந்துள்ளதுடன், அதிக ஈரப்பதம் காரணமாக மனிதர்கள் மற்றும் விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
“சிங்கங்கள் பொதுவாக வெப்பத்தை தாங்கக்கூடியவை என கருதப்பட்டாலும், ஜப்பானின் கோடை கால வெப்பம் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால் ஆபத்து அதிகரித்துள்ளது” என பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விலங்குகளை பாதுகாக்க நீர் தெளித்தல், காற்றோட்ட வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் சிறப்பு குளிரூட்டும் கருவிகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூலை 20 முதல் 26 வரை ஜப்பானில் சுமார் 18,600 பேர் வெப்ப தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 45 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





