பயணிகள் வாகனங்களின் கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக இடம்பெற்ற பல்வேறு விபத்துகளை தொடர்ந்து, வீதி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் புதிய வாகன பரிசோதனை விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் (பரிசோதனை) ஆணை இலக்கம் 03 – 2026 நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.
அண்மைக்கால விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், வாகனங்களின் இயந்திர மற்றும் கட்டமைப்பு குறைபாடுகள் பல விபத்துகளுக்கு காரணமாக இருந்தமை மோட்டார் வாகன பரிசோதகர்களால் கண்டறியப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து சேவைகள், பாடசாலை போக்குவரத்து, அலுவலக போக்குவரத்து மற்றும் விசேட சுற்றுலா பயணங்களுக்காக பயன்படுத்தப்படும் வாடகை வாகனங்களின் தகுதி நிலையை பரிசோதிப்பதற்கான முறையான நடைமுறையை உருவாக்க வேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் ஒழுங்குமுறைகளின் கீழ் வருகின்றன.
2026 மே 19 ஆம் திகதியிடப்பட்ட விசேட வர்த்தமானி இலக்கம் 2489/22 மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆணை, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தேவையான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஆணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்மொழிவு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையின் அனுமதியையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





