ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், முன்னாள் அவாமி லீக் பாராளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் காணொளி வாயிலாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே, ஷகிப் அல் ஹசனின் வீட்டின் மீது இந்த பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு சுமார் 8:45 மணியளவில், மகுரா நகரின் கேஷப்மோர் பகுதியில் அமைந்துள்ள ஷகிப் அல் ஹசனின் பூர்வீக இல்லத்திலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், இதனால் குறித்த இல்லம் சேதமடைந்துள்ளது. புதுடெல்லியில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் மன்றத்தில் ஷேக் ஹசீனா ஏற்பாடு செய்திருந்த காணொளிக் கருத்தரங்கில் அவர் கலந்துகொண்ட சிறிது நேரத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அவாமி லீக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், “வீடுகளுக்குத் தீ வைப்பது அவாமி லீக்கின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டதற்கான விலையாகும். நவ பாசிசம் பங்களாதேஷைச் சூழ்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுடன் உலகப் புகழ்பெற்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணித்தியாலங்களில், அவரது இல்லத்தின் மீது கொடூரமான பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு முன்னதாக, பி.என்.பி, இஸ்லாமிய ஜமாத் மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள், குறித்த சந்திப்பு தொடர்பான செய்திகள் வெளியானால் நீதிமன்றத்தினூடாக வழக்குத் தொடரப்படும் எனத் தேசிய ஊடகங்களை பகிரங்கமாக அச்சுறுத்தியிருந்தன. இந்தத் திட்டமிட்ட தாக்குதலானது, ஜனநாயகக் கட்டமைப்பு என்ற பெயரில் அவாமி லீக் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தொடரும் அடக்குமுறைகளுக்கு மற்றுமொரு சான்றாகும்; இது பாசிசத்தின் அடையாளமாகும்” எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த காணொளி ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஷேக் ஹசீனா, ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் தனது முயற்சியில் கைது அல்லது மரணத்தைக் கூட எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததுடன், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்களாதேஷுக்குத் திரும்புவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore