இலங்கையில் அதிகரித்து வரும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான புதிய சட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) திட்டமிட்டு வருகிறது.
முன்மொழியப்பட்ட புதிய சுற்றாடல் சட்டத்தின் கீழ், ஒலி மாசுபாட்டை கைது செய்யக்கூடிய குற்றமாக வகைப்படுத்துவது தொடர்பில் தற்போது திட்டமிடப்பட்டு வருவதாக CEA பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தப் புதிய விதிமுறைகள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்றும், தற்போது திட்டமிடல் கட்டத்திலேயே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடியிருப்புப் பகுதிகளில் ஒலி மாசுபாடு தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
இதனை கருத்திற்கொண்டு, தற்போதுள்ள சுற்றாடல் சட்டத்தின் கீழான கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு தெளிவான அதிகாரங்களை வழங்கவும் புதிய சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன.
புதிய சட்ட முன்மொழிவுகள் உரிய சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பின்னரே நடைமுறைக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.





