உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து பகிர்ந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர் ஜனித மாரசிங்க தயாரித்த திரைப்படத்தை Facebook மற்றும் Telegram ஆகிய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படும் நபருக்கு எதிராக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரசித்த ஜினசேன, திரைப்படங்களை இவ்வாறு சட்டவிரோதமாகப் பகிர்வது சாதாரணமான குற்றமாகக் கருதப்பட முடியாது என்றும், அது ஒரு குற்றச் செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்ட நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டால், இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை குற்றச்செயலில் ஈடுபட்டவரிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொரலவெவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில், குறித்த இளைஞருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு சம்பவம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதேவேளை, திரைப்படத் திருட்டு மற்றும் சட்டவிரோதப் பகிர்வுகளைத் தடுப்பதற்கும், இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிரான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





