உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, தனது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸியின் மறைவுக்குப் பின்னர், தொடர்ந்து நீண்ட காலம் கால்பந்து விளையாடுவது குறித்து தனக்கு தற்போது தீவிரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
39 வயதான மெஸ்ஸி, 2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்த அர்ஜென்டினா அணியின் தலைவராக இருந்தார். உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் அமெரிக்காவின் Major League Soccer அணியான Inter Miami அணிக்காக மீண்டும் விளையாடத் தொடங்கியிருந்தார்.
எனினும், அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி (68) கடந்த வார இறுதியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மெஸ்ஸி தனது கால்பந்து நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவர், செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளார்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “நான் இதுவரை செய்ததெல்லாம் கால்பந்து விளையாடுவதுதான். ஆனால் இனிமேல் இதை நீண்ட காலம் தொடர்வேனா என்பதில் எனக்கு தீவிரமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
தனது தந்தையை நினைவுகூர்ந்த மெஸ்ஸி, “நீங்கள் ஆரம்பம் முதலே எனக்கு அருகில் இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி, அவரது தந்தையாக மட்டுமன்றி நீண்ட காலம் அவரது முகவராகவும் இருந்து, அவரது கால்பந்து வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
2026 உலகக் கிண்ணத்தின் போது ஜோர்ஜ் மெஸ்ஸி இல்லாதது ஏற்கனவே கவனத்தை ஈர்த்திருந்தது. அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், மெஸ்ஸியின் குடும்பத்தினர் ஊடகங்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அல்ஜீரியாவுக்கு எதிரான குழு நிலைப் போட்டியில் கோல் அடித்த பின்னர் மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுததுடன், விளையாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தனது தந்தையின் விருப்பமே கடைசி உலகக் கிண்ணத்தில் பங்கேற்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், “நாம் இறுதிப் போட்டிக்கு செல்வோம் என்றும், நீங்கள் வந்து அதை நேரில் பார்ப்பீர்கள் என்றும் நான் தொடர்ந்து கூறினேன். ஆனால் நீங்கள் அங்கு இருக்க முடியவில்லை” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
எட்டு முறை Ballon d’Or விருது வென்ற மெஸ்ஸி, தனது தந்தையின் நினைவை தனது பிள்ளைகளின் வளர்ப்பின் மூலம் தொடர்ந்து கௌரவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மெஸ்ஸி தற்போது Inter Miami அணியுடன் 2028ஆம் ஆண்டு பருவத்தின் இறுதி வரை ஒப்பந்தத்தில் உள்ளார். எனினும், அவரது சமீபத்திய கருத்துகள் காரணமாக அவரது ஓய்வு குறித்த எதிர்பார்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.





