மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல்
சத்தம் மாற்றியமைக்கப்பட்ட, அசல் வடிவம் மாற்றப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கொள்ளளவை விட அதிக கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இன்று (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிள்களில் குழுக்களாகப் பயணிக்கும் சிலர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி, விபரீதமான மனநிலையில் வாகனங்களை செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நபர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்காமல், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
அத்துடன், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கோ மோட்டார் சைக்கிள்களை வழங்கும் பெற்றோர் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.





