இலங்கையில் நுகர்வோர் அதிகார சபையின் (CAA) நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய பொலித்தீன் பாவனை 2.6 கோடி அலகுகளில் இருந்து 1.6 கோடி அலகுகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொலித்தீன் பாவனை 1 கோடி அலகுகளால் குறைக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்கு மாற்றீடான பொருட்களை அறிமுகப்படுத்தி, இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலை கட்டுப்பாடுகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அதிக கவனம் செலுத்தி, கடுமையான ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.





