கிளிநொச்சி, பளை பகுதியில் முன்னாள் LTTE பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் கூறிய நபர் தொடர்பில் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சர், சங்கீத் ஜயசேகர என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர் போரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணைகளின்படி, அவரிடம் இரண்டு போலி அடையாள அட்டைகள் இருந்ததுடன், அவர் ஏழு வெவ்வேறு முகவரிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், மோசடி உள்ளிட்ட மூன்று தனித்தனி குற்ற வழக்குகளில் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தன்னை மருத்துவராகவும் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், அவர் முன்னர் சில அமைச்சரவை ஊழியர்களுடன் தொடர்புடைய ஆலோசகராக பணியாற்றியதாகவும், அந்த நியமனங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதனிடையே, அவர் கூறிய LTTE பயிற்சி முகாம் தொடர்பான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அங்கு LTTE பயிற்சி முகாம் இயங்கியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார். அந்த இடம் விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பகுதி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
அதேவேளை, குறித்த இடம் தொடர்பான விவகாரம் அரச காணி சட்டவிரோத ஆக்கிரமிப்பு, அனுமதியற்ற கட்டுமானம், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மணல் அகழ்வு தொடர்பானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த பகுதியில் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலம் துப்பரவு செய்யப்பட்டு பின்னர் 20 ஏக்கர் வரை விரிவுபடுத்தப்பட்டு கற்றாழை மற்றும் மரக்கறி பயிரிடப்பட்டதாகவும், அங்கு மூன்று மாடிக் கட்டிடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
LTTE பயிற்சி முகாம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை எனவும், சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கு இடமளிக்கப்படாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
NewsWire





