இந்தியாவின் இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று (24) அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
இமாச்சல பிரதேசத்தின் சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 8 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து லடாக்கின் லே பகுதியில் காலை 8.25 மணியளவில் 3.5 ரிக்டர் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது சுமார் 120 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இரு நிலநடுக்கங்களினாலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
குறிப்பாக, லடாக்கின் லே பகுதியில் நேற்று (23) 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





