ரூ.20,000 இலஞ்சம் கோரியதாகவும் பெற்றுக்கொண்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவான CIABOC மேற்கொண்ட நடவடிக்கையின்போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பரிசோதகர் பலசுப்பிரமணியம் பிரகலாதன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசன் மௌலானா அதுஹார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் தொடர்பான சந்தேகநபர் ஒருவரின் வழக்கில், அவரிடமிருந்ததாக கூறப்படும் ‘ICE’ போதைப்பொருளின் முழு அளவை நீதிமன்றத்தில் அறிக்கையிடாமல், குறைந்த அளவிலான ஹெரோயினை மாத்திரம் குறிப்பிடுவதற்கு பதிலாக பணம் கோரப்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கையின் மூலம் சந்தேகநபருக்கு குறைந்த தண்டனை கிடைக்கச் செய்வதே நோக்கமாக இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது சந்தேகநபரின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டாவது சந்தேகநபர் ஊடாக பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் CIABOC குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பு: சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை, அவர்கள் குற்றமற்றவர்கள் எனக் கருதப்படுவர்.





