வலுவடைந்து வரும் எல் நினோ (El Niño) நிலை, அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் எதிர்வரும் மகா பருவ பயிர்ச்செய்கை காலத்தில் பெய்யக்கூடிய அதிக மழை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் இலங்கை அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆசிய–பசிபிக் பிராந்தியத்திற்கான மதிப்பீட்டில் இலங்கை “Elevated Concern” எனப்படும் அதிக கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஒக்டோபர் மாதம் முதல் இரண்டாவது இடைப்பருவப் பருவமழை ஆரம்பிக்கும் நிலையில், வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீர்த்தேக்கங்களை நிரப்புவதற்கு சாதகமாக அமையக்கூடிய போதிலும், அதிக மழை பெய்தால் வெள்ளம், வயல்களில் நீர் தேங்குதல் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகரித்துள்ள எரிபொருள் மற்றும் உர விலைகள் உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் மத்திய கிழக்கு நெருக்கடிக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடுகையில் முறையே சுமார் 44% மற்றும் 41% அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உர இறக்குமதி மற்றும் சர்வதேச கோதுமை விலைகளில் இலங்கை கொண்டுள்ள சார்புநிலையும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என ஐ.நா. அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த அறிக்கையை FAO, WFP, UN Women, WMO உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் இணைந்து தயாரித்துள்ளன.





