நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக அதிகரித்துள்ளதுடன், மேலும் 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள தேசிய அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரசபையின் (NDRRMA) தகவலின்படி, சித்வான் மாவட்டத்தில் 272 சடலங்களும், கிழக்கு நவல்பராசியில் 207 சடலங்களும், மேற்கு நவல்பராசியில் 151 சடலங்களும், கோர்கா மாவட்டத்தில் 62 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், நுவாகோட் மாவட்டத்தில் 95 சடலங்களும், தாடிங் பகுதியில் 55 சடலங்களும், தனஹூவில் 37 சடலங்களும், ராசுவாவில் 24 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன 4,247 பேரில் 99 பேர் பாதுகாப்புப் படையினரும், 591 பேர் வெளிநாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் நேபாளத்தில் உள்ள சுமார் ஆறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் குறித்து நேபாள பிரதமர் பலேந்திர ஷா, நாடு இதுவரை எதிர்கொண்டிராத அளவிலான “கற்பனை செய்ய முடியாத மற்றும் இதயத்தை உடைக்கும்” பேரழிவை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்ட பனிக்கட்டிகள், கற்கள் மற்றும் பெருமளவிலான குப்பைகள் கிராமங்கள் மற்றும் நகரங்களை தாக்கியதில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





