அர்ஜென்டினா அணியின் அணித்தலைவரும் கால்பந்து நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அர்ஜென்டினா தேசிய அணிக்காக அவர் மேற்கொண்ட 21 ஆண்டுகால சிறப்பான சர்வதேச கால்பந்து பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.
39 வயதான மெஸ்ஸி, திங்கட்கிழமை (31) சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் தனது ஓய்வு முடிவை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாகவும், சர்வதேச கால்பந்தில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாக தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும், அதிக கோல்கள் அடித்த வீரராகவும் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். 2005ஆம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமான அவர், 207 போட்டிகளில் 125 கோல்களை அடித்துள்ளார்.
அர்ஜென்டினாவுடனான அவரது மிகப்பெரிய சாதனையாக, 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற FIFA உலகக் கிண்ணத்தை அணித்தலைவராக வென்றமை அமைந்துள்ளது.
மேலும், 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற Copa América கிண்ணங்களையும் அர்ஜென்டினா அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதற்கு முன்னர் 2014 உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும், தொடர்ச்சியான Copa América இறுதிப் போட்டிகளிலும் ஏற்பட்ட தோல்விகளால் சர்வதேச அரங்கில் ஏமாற்றங்களை சந்தித்திருந்த மெஸ்ஸி, பின்னர் அர்ஜென்டினாவுடன் முக்கியமான கிண்ணங்களை வென்று தனது சர்வதேச பயணத்தை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.
மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணிக்கான இறுதி போட்டி 2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியாகும். அந்தப் போட்டியில் நடப்பு சம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
தனது அணியினருடன் இணைந்து பெற்ற சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ள மெஸ்ஸி, அர்ஜென்டினா அணியில் புதிய தலைமுறை வீரர்கள் உருவாகி வருவதும் தனது முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
எட்டு முறை Ballon d’Or விருது வென்ற மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றாலும், அமெரிக்காவில் உள்ள Inter Miami கழகத்திற்காக தனது கழக மட்ட கால்பந்து பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளார்.





