யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், தப்பிச் சென்ற நிலையில் இளவாலை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக குறித்த நபருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
நஷ்டஈட்டை வழங்கத் தவறினால் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக தெரிவித்து, சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் குறித்த கைதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், நேற்று (30) மதியம் வைத்தியசாலையிலிருந்து குறித்த கைதி தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சிறைக் காவலர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரின் விசேட குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த நிலையில் குறித்த கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சிறைக் காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பிலும் தனியான வழக்கொன்றை தாக்கல் செய்து, சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





