பிரித்தானியாவின் Lowestoft பகுதியில் உள்ள Pleasurewood Hills கேளிக்கைப் பூங்காவில் ரோலர் கோஸ்டர் ஒன்றில் சிக்கிய 27 பேர் தீயணைப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
Wipeout எனப்படும் இந்த ரோலர் கோஸ்டர், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 15 மீற்றர் உயரத்தில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல கேளிக்கைச் சாதனங்களிலும் மின்சாரத் தடையால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து Suffolk தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயரத்தை எட்டக்கூடிய ஏணி உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி பயணிகளை ஒவ்வொருவராக கீழே அழைத்து வந்துள்ளது.
மீட்பு நடவடிக்கை சுமார் மூன்று மணி நேரம் நீடித்த நிலையில், மாலை 5.10 மணியளவில் 27 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் ஒத்துழைப்புக்கு கேளிக்கைப் பூங்கா நிர்வாகம் நன்றி தெரிவித்ததுடன், ஏற்பட்ட சிரமத்துக்காக வருத்தமும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Wipeout ரோலர் கோஸ்டர் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கடந்த 2024-2025 குளிர்காலத்தில் சுமார் £1 மில்லியன் செலவில் மேம்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





