லீப்சிக் விமான நிலைய ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா – ஜெர்மனி குற்றச்சாட்டு

ஜெர்மனி, செப். 01: ஜெர்மனியின் லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ட்ரோன் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ள லீப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் வெடிபொருளை ஏந்திய ட்ரோன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடிக்காமல் இருந்ததுடன், அதற்குப் பொருத்தப்பட்டிருந்த வெடிப்பான் செயலிழந்திருந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மற்றொரு ட்ரோன் அருகிலிருந்த சரக்கு விமானத்துடன் மோதியிருக்கலாம் எனவும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் இடம்பெற்ற சுமார் 10 நாட்களுக்குப் பின்னர் மூன்றாவது ட்ரோன் ஒன்றும் விமான நிலையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட், ட்ரோன் தாக்குதல் தொடர்பாக கிடைத்த உபகரணங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ரஷ்யாவின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஐரோப்பாவில் ரஷ்யா முன்னெடுத்து வருவதாக கூறப்படும் “ஹைபிரிட் நடவடிக்கைகளின்” முறையுடன் ஒத்துப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய தூதரகத்திற்கு எதிராக நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து ஜெர்மனி ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் யோஹான் வாடெஃபுல், பொன்னில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெர்லினில் உள்ள Russian House அமைப்புக்கான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், ரஷ்ய பிரஜைகளுக்கான நுழைவுக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தடைகளைத் தவிர்க்க பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் “Shadow Fleet” கப்பல்களுக்கு எதிரான அழுத்தத்தையும் அதிகரிக்கப் போவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பதில்

ஜெர்மனியின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளதுடன், ஜெர்மனி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு “கண்ணாடி போன்ற பதில் நடவடிக்கை” எடுக்கப்படும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா தெரிவித்துள்ளார்.

NATO மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு

NATO பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, ஜெர்மனிக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழுத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்பதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக மேலதிக தடைகளை தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

லீப்சிக்/ஹாலே விமான நிலையம் ஜெர்மன் இராணுவம் மற்றும் NATO நாடுகளின் இராணுவப் பொருட்கள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுவதுடன், உக்ரைனின் Antonov Airlines நிறுவனத்திற்கும் முக்கிய சரக்கு மையமாக செயல்படுகிறது.

இதனிடையே, கிழக்கு ஜெர்மனியின் பிராண்டன்பர்க் மாநிலத்தில் உள்ள மின்சார துணை நிலையம் ஒன்றில் வெடிபொருள் மற்றும் தீப்பற்றக்கூடிய சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் மின்கம்பி ஒன்று சேதமடைந்து தற்காலிக மின்தடை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கும் யார் காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore