பீகார், செப்டம்பர் 2: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், கடுமையான நீரோட்டம் மற்றும் கரை அரிப்பின் காரணமாக இடிந்து ஆற்றுக்குள் மூழ்கியுள்ளது.
பாகல்பூர் மாவட்டத்தின் ராகோபூர் கிராமத்தில் கங்கை நதியின் கரையோரமாக இந்த பழமையான கோவில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அந்தப் பகுதியில் கங்கை நதியின் நீரோட்டம் அதிகரித்திருந்ததுடன், கரையோரங்களில் கடுமையான மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலின் அடிப்பகுதியில் இருந்த மண் படிப்படியாக அரிக்கப்பட்டு, கட்டுமானத்தின் நிலைத்தன்மை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவிலின் அடிப்பகுதி திடீரென வலுவிழந்ததைத் தொடர்ந்து, முழு கட்டிடமும் சில நொடிகளுக்குள் சரிந்து கங்கை நதியில் விழுந்துள்ளது.
பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வந்த இந்த கோவில் ஆற்றில் மூழ்கிய சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
நதிக்கரையோரங்களில் தொடர்ந்து இடம்பெறும் கரை அரிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பு குறித்தும் கவலை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.





