தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சுமார் 60,000 தாய் பாட் (அமெரிக்க டொலர் 1,800) பில் தொகையை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் 18 வயது இளம்பெண்ணின் தலைமுடியை மதுபான விடுதி ஊழியர்கள் மொட்டையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 25ஆம் திகதி பிங்க்லாவ் பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு போலி அடையாள அட்டையை பயன்படுத்தி சென்றதாகக் கூறப்படும் குறித்த இளம்பெண், அங்கு உணவு மற்றும் மதுபானங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் சுமார் 60,000 தாய் பாட் பில் செலுத்த வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் பணம் செலுத்தாமல் வெளியேற முயன்றபோது, பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக மதுபான விடுதி நிர்வாகம் அவரை முறைசாரா முறையில் முடியை மொட்டையடிக்க ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, மின்சார ரேசர் மூலம் அவரது தலைமுடி முழுமையாக மொட்டையடிக்கப்பட்டதுடன், சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானது.
காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் தாய்லாந்து சமூக மேம்பாடு மற்றும் மனித பாதுகாப்பு அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளுக்குப் பதிலாக தனியார் நிறுவனமொன்று இவ்வாறு தண்டனை வழங்கியமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.





