கொழும்பு: பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், 252 சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வீதி பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துத் துறையினரிடம் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் நடமாடும் ஆய்வக பேருந்தைப் பயன்படுத்தி மருத்துவ அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர்.
பொதுப் போக்குவரத்து சேவையில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதுடன், வீதி விபத்துகளை குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை உறுதி செய்யப்பட்ட சாரதிகளுக்கு நிறுவன விதிமுறைகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், சட்டரீதியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





