வெல்லம்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த 01ஆம் திகதி வெல்லம்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும் அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் இலத்திரனியல் சிகரெட்டுகள் 130 கைப்பற்றப்பட்டதுடன், அவற்றை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட கார் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





