யால தேசிய பூங்காவின் 5ஆம் வலயத்தில் சட்டவிரோத வேட்டையாடல் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் வெஹெரகல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த சபாரி ஜீப் சாரதி ஒருவர், அதே தினம் குறித்த காணொளியை பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து, ஆகஸ்ட் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தேடுதல் மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த நபர் வழக்கமாக வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாக பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னரும் வனவிலங்கு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் வெல்லவாய நீதவான் நீதிமன்றம் ரூ.150,000 அபராதம் விதித்ததுடன், இரண்டு வருட சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்திருந்தது.
அபராதத்தை செலுத்த முடியாத காரணத்தால் அவர் மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சம்பவம் தொடர்பான தகவல்களும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியான பதிவொன்றைத் தொடர்ந்து இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





