காலி: யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக விளங்கும் காலி டச்சு கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலத்தடி கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு தற்போது சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகிறது.
17ஆம் நூற்றாண்டில் டச்சு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பழமையான வடிகால் அமைப்பு, கடலின் அலை மற்றும் நீரோட்டத்தைப் பயன்படுத்தி தினமும் இருமுறை தானாகவே சுத்தமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருங்கற்கள் மற்றும் செங்கற்களைக் கொண்டு வலுவான வளைவு வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, அக்கால டச்சு நகர்ப்புற பொறியியலின் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு சிறந்த சான்றாகக் கருதப்படுகிறது.
காலப்போக்கில் மணல் மற்றும் குப்பைகள் தேங்கி வடிகால் பாதைகள் அடைபட்டிருந்த நிலையில், காலி மாநகர சபை தற்போது அவற்றை அகற்றி, அமைப்பை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.





