பசிபிக் பெருங்கடல் பகுதியில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் ஹவாய் தீவுகளில் கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில், அங்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சீனாவை தாக்கும் இந்த ஆண்டின் ஏழாவது சூறாவளியாகக் குறிப்பிடப்படும் ‘சௌடெலோர்’ (Soudelor) காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ தாக்கத்தால் கொலம்பியாவில் மழைப்பொழிவு குறைந்து வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மக்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா மற்றும் சுவிட்சர்லாந்தின் சில வனப்பகுதிகளிலும் வறட்சியுடன் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையிலும் வறட்சியின் தாக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், 35,000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.





