அமெரிக்க கடற்படை கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானுக்குச் சொந்தமான மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 5ஆம் திகதி பிராந்திய கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலை நோக்கி பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக தப்பியதாகவும், அமெரிக்க இராணுவத்தினர் எவரும் காயமடையவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈரானின் மூன்று கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக செப்டம்பர் 1ஆம் திகதியும் ஈரானின் இராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதில் IRGC-யின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் கட்டமைப்புகள், கடல்சார் வளங்கள், கண்ணிவெடி அமைக்கும் திறன்கள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் உள்ளிட்டவை இலக்குகளாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றும் அமெரிக்கத் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.





