கண்டி, தெல்தெனிய – விக்டோரியா பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் விருந்தொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 36 ஆண்களும் 5 பெண்களும் அடங்குகின்றனர். இவர்களிடமிருந்து கஞ்சா, ஹேஷ் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 35 பியர் கேன்கள் மற்றும் 13 மதுபான போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண்கள் 22 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





