இந்தோனேசியாவில் அனக் கிரகடோவா எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, எட்டு விமான நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 1.70 இலட்சம் பயணிகள் பயணத் தடையை எதிர்கொண்டுள்ளனர்.
ஜாவா மற்றும் சுமாத்திரா தீவுகளுக்கு இடையிலுள்ள சுந்தா நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள அனக் கிரகடோவா எரிமலை கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியான நில அதிர்வுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.
எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் வளிமண்டலத்தில் பரவியதைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஜகார்த்தாவில் உள்ள சொகர்னோ–ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட எட்டு விமான நிலையங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையால் 1,558 விமானங்கள் தாமதமடைந்துள்ளதாக இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களின் செயற்பாடுகள் திங்கட்கிழமை காலை 9.00 மணி வரை நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலைச் சாம்பல் மேற்கு ஜாவா நோக்கியும் பரவியதைத் தொடர்ந்து, மேலும் பல விமான நிலையங்களின் செயல்பாடுகளை நிறுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சிங்கப்பூர் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தோஹா, சிட்னி மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட சர்வதேச விமானப் பாதைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனத்தின் தகவலின்படி, எரிமலைச் சாம்பல் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் சுமார் 6,000 மீற்றர் உயரம் வரையும், சுமாத்திரா பக்கத்தில் மேற்குப் பகுதியில் சுமார் 15,000 மீற்றர் உயரம் வரையும் பரவியுள்ளது.
இதனிடையே, தற்போதைய எரிமலைச் செயற்பாட்டுடன் தொடர்புடைய சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலைச் சாம்பல் காரணமாக கண் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும் முகக்கவசங்களைப் பயன்படுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சில பகுதிகளில் மாணவர்களின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அனக் கிரகடோவா எரிமலை, 1883ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய கிரகடோவா வெடிப்புக்குப் பின்னர் உருவான பள்ளத்தாக்குப் பகுதியில் கடலில் இருந்து தோன்றிய எரிமலையாகும். 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட அதன் சரிவினால் சுனாமி உருவாகி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய எரிமலைச் செயற்பாட்டின் காரணமாக விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.





