செப்டெம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் இன்று (08) ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இரு அதிவிசேட வர்த்தமானி கட்டளைகள் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றப் பொதுச்செயலாளர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, நாமல் ராஜபக்ஷவை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.





