முல்லைத்தீவு, புத்துமாத்தளன் கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நேற்று (07) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்துமாத்தளன் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மீன் சேகரிப்பு நிலையமொன்றை அதிகாரிகள் சோதனையிட்டபோது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவான மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட மீன்களும் கைது செய்யப்பட்ட பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.





