தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், திமுக கொறடா எ.வ. வேலு உரையாற்றிய போது, முதலமைச்சர் நேற்று அவையில் பேசிய சில விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் தொடர்பாக முதலமைச்சர் அவையில் கருத்து தெரிவித்ததாகவும், ஏற்கனவே பலமுறை சட்டசபையில் விவாதிக்கப்பட்ட சர்க்காரியா ஆணைக்குழு அறிக்கை குறித்தும் ஆதாரமற்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், காவல்துறை மானிய விவாதத்துடன் தொடர்பில்லாத சில குறிப்புகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சர்க்காரியா ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார். அதேவேளை, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பான சில வரலாற்று சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, முதலமைச்சர் அவையில் ஆற்றிய உரையை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
எனினும், முதலமைச்சரின் உரையை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பியதுடன், சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
நிலைமை தொடர்ந்த நிலையில், சபாநாயகர் இருக்கையைச் சுற்றி நின்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவைக்குள் வந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுக உறுப்பினர்கள் சிலரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.
உறுப்பினர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை அமைதியாக அழைத்துச் செல்லுமாறு சபாநாயகர் காவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த சம்பவத்தால் தமிழக சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
குறிப்பிடத்தக்க வகையில், நேற்றைய சட்டசபை அமர்வின்போதும் திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.





