சவுதி அரேபியாவின் தெற்கு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் எரிசக்தித் துறை சார்ந்த இடங்களை இலக்காகக் கொண்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 73 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்ஹா, கமீஸ் முஷைத், ஜிசான் மற்றும் நஜ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.
மேலும், தெற்கு பகுதிகளில் உள்ள சில எரிசக்தி நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சவுதி எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், குறிப்பிட்ட சில நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை சவுதி அரேபியா கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாகவும், தாக்குதல்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக ஹூத்தி தரப்பிலிருந்து உடனடி பதில் எதுவும் வெளியாகவில்லை.
யேமனில் நீண்டகாலமாக நீடித்து வரும் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அண்மைய வன்முறைகளால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.





