ஹொரணை வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றை பார்வையிட்ட பின்னர், நேற்று நள்ளிரவு சுமார் 2.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் சம்பவத்தை எவரும் அவதானிக்காத நிலையில், காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் விபத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் வகவத்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாக பயணித்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும், முன்னால் பயணித்த நபர் விபத்து இடம்பெற்றதை நேரில் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





