ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் உரையாற்றிய ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அம்பாசிடர் சுமித் தசநாயக்க, நாட்டுக்கேற்ப அமைக்கப்படும் மனித உரிமை தொடர்பான பணிக்குழுக்கள் காலவரையறையின்றி தொடரக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நாடுகளில், உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவியின் மூலம் அடைந்த முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, இத்தகைய பணிக்குழுக்களை நிறைவு செய்வதற்கான தெளிவான வழிமுறைகள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பணிக்குழுக்களும் குறிப்பாக நாட்டுக்கேற்ப அமைக்கப்படும் பணிக்குழுக்கள், வரையறுக்கப்பட்ட இலக்குகள் மற்றும் அளவிடக்கூடிய பெறுபேறுகளின் அடிப்படையில் காலமுறை மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் தீர்மானங்களில் காலாவதி விதிகள் (Sunset Clauses) மற்றும் படிப்படியான நிறைவு ஏற்பாடுகள் (Phase-out Provisions) உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை கோரியுள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் இலங்கையின் தேசிய செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அம்பாசிடர் சுமித் தசநாயக்க, அந்த முன்னேற்றங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, பணிக்குழுக்களின் தொடர்ச்சியான செயற்பாடு தெளிவான தேவையும் பெறுபேறுகளும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், நிறுவன ரீதியான தொடர்ச்சிக்காக அவை காலவரையின்றி நீடிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





