இலங்கையில் AI மூலம் உருவாக்கப்படும் போலி நபர்கள் மற்றும் அரசியல் Deepfake காணொளிகள், நாட்டின் ஜனநாயக மற்றும் தேர்தல் செயல்முறைகளுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
சுயாதீன ஆய்வாளர் Dr. Sanjana Hattotuwa வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவைப் போல ஆள்மாறாட்டம் செய்து உருவாக்கப்பட்ட 10 AI காணொளிகள் Facebook இல் 12 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளிகளில் பிரதமர் ஒருபோதும் கூறாத கருத்துகள் அவரால் கூறப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு போலி காணொளி மாத்திரம் சுமார் 3.24 இலட்சம் பார்வைகளை பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சில காணொளிகளில் AI மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை காட்டும் வெளிப்புற Watermark காணப்பட்ட போதிலும், அவை வெளியிடப்பட்ட Facebook பக்கங்களில் தளத்தினால் வழங்கப்படும் AI-generated content எச்சரிக்கை காணப்படவில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI மூலம் உருவாக்கப்படும் போலி பெண்கள் தொடர்பான உள்ளடக்கங்களிலிருந்து தொடங்கிய இந்தப் போக்கு, தற்போது அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் Deepfake உள்ளடக்கங்களாகவும் விரிவடைந்து வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எதிர்கால ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள், அரசியல் விவாதங்கள் மற்றும் தேர்தல்களுக்கு இடையிலான ஆட்சிச் செயல்முறைகளிலும் இத்தகைய தொழில்நுட்பம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், Meta நிறுவனத்திடம் பொறுப்பான நடவடிக்கை கோருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sinhala மற்றும் Tamil மொழிகளில் உருவாக்கப்படும் ஏமாற்றும் AI உள்ளடக்கங்களை தெளிவாக அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்யும் நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், அரசியல் நோக்கிலான பாலின அடிப்படையிலான துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆய்வாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.





