கொழும்பு, தெஹிவளை – களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (09) இரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரவு சுமார் 11.45 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டின் நுழைவாயில் வழியாக கைக்குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் முன்பகுதியில் இருந்த இரண்டு ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. எனினும், இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற போது வீட்டிற்குள் 56 வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதலுக்கு இலக்கான வீடு பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபருடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமானது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





