இலங்கையின் சுகாதார சேவையில் நிலவும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக ஒட்டுமொத்த சுகாதார சேவையும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் சுகாதார சேவைக்கான அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படவில்லை என GMOA தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த ஒரு தசாப்தத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அறுவைச் சிகிச்சைகள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் பரிசோதனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
புதிய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றுக்கான பணியாளர் தேவை பழைய அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தொடர்வதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, பொருளாதார நெருக்கடி காலத்தில் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியமை சுகாதார சேவைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இதுவரை சாதகமான தீர்வு கிடைக்கவில்லை எனவும் சங்கம் கூறியுள்ளது.
எனவே, நாட்டின் சுகாதார சேவையைப் பாதுகாப்பதற்காக சுகாதாரப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக மீளாய்வு செய்து திருத்துமாறு அதிகாரிகளிடம் GMOA கோரிக்கை விடுத்துள்ளது.
“பணியாளர் பற்றாக்குறை தொடருமானால் சுகாதார சேவை முடங்கும் அபாயம்” என GMOA எச்சரிக்கை விடுத்துள்ளது.





