கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 43 வயதுடைய உகண்டா பிரஜை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் உகண்டாவிலிருந்து கட்டார் சென்று, அங்கிருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் முதல் மாடியில் மதியம் வரை தங்கியிருந்த சந்தேகநபரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் போதைப்பொருள் உருண்டைகள் விமான நிலையத்திலேயே வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபரின் உடலில் எஞ்சியுள்ள கொக்கைன் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக அவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.





