இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளை திருத்துவது தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாடு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்பைப் பயன்படுத்தி வருவதாகவும், எரிபொருள் விலைகளை மாற்றுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் மூன்று மாத காலத்திற்கு சலுகைகளை வழங்கியுள்ளதுடன், இதற்காக திறைசேரியிலிருந்து ரூ.57 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் விலை தொடர்பான தீர்மானங்கள் உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.





