இலங்கையில் நிலவும் எல் நினோ (El Niño) நிலைமை காரணமாக அடுத்த 10 நாட்களில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் ஏற்படும் தொடர்ச்சியான வானிலைத் தாக்கங்கள், எல் நினோ நிலைமையின் காரணமாக மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரித்து வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் மாதத்தில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வழமையான அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை (IOD) காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2027 பெப்ரவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் அதிக வெப்பநிலையும் குறைந்த மழைவீழ்ச்சியும் ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் நீர்வளங்களை முறையாக நிர்வகிப்பது அவசியம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





