போரினால் ஏற்கனவே சேதமடைந்திருந்த ஆறு மாடிக் கட்டிடம் ஒன்று காஸா நகரின் Tal al-Hawa பகுதியில் புதன்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில், 8 குழந்தைகள் உட்பட குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடத்தில் சுமார் 10 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும், கட்டிடம் ஒருபுறமாக ஆபத்தான நிலையில் சாய்ந்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது 70 முதல் 100 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளுக்கு தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதால், மீட்புப் பணியாளர்கள் சிலர் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
இடிபாடுகளுக்குள் இருந்து இன்னும் குரல்கள் கேட்கப்படுவதாக காஸா நகர சிவில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போரினால் சேதமடைந்துள்ள சுமார் 400 கட்டிடங்கள் மேலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) அதிகாரி எச்சரித்துள்ளார்.
காஸாவில் தற்போது சுமார் 12 இலட்சம் மக்கள் கூடாரங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





