ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன், சிறுவர்களின் இணையப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பில் புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதன்படி, 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள், இணையவழி விளையாட்டுகள் மற்றும் AI Chatbot-களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பெற்றோரின் கண்காணிப்புடன் கூடிய விசேட “மினி கணக்குகள்” (Mini Accounts) மூலம் மட்டுமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.
இணையத்தில் சிறுவர்களை அதிகம் ஈர்த்து அடிமையாக்கும் அம்சங்கள், தீங்கான உள்ளடக்கங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்படும் போலியான ஆபாசப் படங்கள் உள்ளிட்ட இணைய அச்சுறுத்தல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதே இந்த முன்மொழிவின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் எதிர்வரும் நாட்களில் வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இது தற்போது ஒரு முன்மொழிவு மட்டுமே; வாக்கெடுப்பு மற்றும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளின் பின்னரே இதன் இறுதி நிலை தீர்மானிக்கப்படும்.





