சீதுவை பகுதியில் உள்ள விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டதில் 49 வயதுடைய விடுதி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் போயகனே பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அந்த விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்த ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு ஊழியருடன் இணைந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, அவர் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





